திருத்தணி அருகே தந்தை ஓட்டிய டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை சாவு - பின்னோக்கி இயக்கியபோது பரிதாபம்

திருத்தணி அருகே தந்தை ஓட்டிய டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2023-05-30 09:18 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி இருளர் காலனி பகுதியில் வசிப்பவர்கள் விஜய் (வயது 28), பிருந்தா (24) தம்பதி.. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவருடைய 2-வது ஆண் குழந்தை ஜெய் கிருஷ்ணன் (2). விஜய் அந்த பகுதியில் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான டிராக்டரை தினக்கூலிக்கு ஓட்டி வருகிறார்.

நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் டிராக்டரை தனது வீட்டின் அருகே விஜய் நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டரை விஜய் பின்னால் இயக்க முயன்றார். மகன் ஜெய்கிருஷ்ணன் இருப்பது தெரியாமல் விஜய் டிராக்டரை இயக்கியதால் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி ஜெயகிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற கனகம்மாசத்திரம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வயது குழந்தை தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்