பாடகி சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

பாடகி சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது என அவரது கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2017-03-04 10:08 GMT
சென்னை, 

பிரபல சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் ஆட்கள் தன்னை காயப்படுத்தி விட்டதாக கூறி இருந்தார். படமும் வெளியானது. பின்னர் அந்த தகவலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா கூறி இருந்தார். இதுபற்றி சுசித்ராவின் கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலில், ‘சுசித்ராவின் டுவிட்டர் யாரோ சிலரால் முடக்கப்பட்டு விட்டது. அதில் வெளியான படத்துக்கும், செய்திக்கும் எனது மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்   கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார்.

தொடர்ந்து டுவிட்டரில் வெளியான செய்தியில் சுசித்ரா அவரது கணவர் கார்த்திக்கை டைவர்ஸ் செய்து விட்டதாக கூறப்பட்டிருந்தது. பின்னர் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முடக்கப்பட்ட டுவிட்டர் மீட்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, டி.வி. தொகுப்பாளர் டி.டி. ஆகியோரின் அந்தரங்க படங்கள் வெளியானது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளித்த சுசித்ரா, “மர்ம நபர்களால் எனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டு இருக்கிறது. யாருடைய புகைப்படமும் என்னிடம் இல்லை. நான் யாரையும் இழிவுபடுத்தும் ஆள் இல்லை. முன்பும் ஒருமுறை என் டுவிட்டர் முடக்கப்பட்டது. என்னை தொடர்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் பாடகி சுசித்ராவின் கணவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், “சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது மனநிலை மாறிய தால்தான் இதுபோல் நடந்து விட்டது. நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கார்த்திக்கின் இந்த விளக்கத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒரு இசை அமைப்பாளருடன் விருந்தில் கலந்து கொண்டபோது தான் குடித்தபானத்தில் மருந்து கலக்கப்பட்டு இருந்தது. பிறகு நடந்த அந்த பயங்கர அனுபவத்தை இங்கு கூற முடியாது என்றும் சுசித்ரா பெயரில் தகவல் பதிவாகி இருக்கிறது. இதன்பிறகு சுசித்ரா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய  டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. யாரோ தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இன்று காலை தான் இந்த தகவல் எனக்கு தெரியும். எனக்கும், என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் தகவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்