காவிரி பிரச்சினை தொடர்பாக கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி பங்கேற்காது

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் நெய்வேலியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2018-05-16 23:59 GMT
நெய்வேலி,

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் தமிழக அரசு பின்வாங்காமல் அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைய தொடர்ந்து போராட வேண்டும். காவிரி மற்றும் ‘நீட்’ தேர்வு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், காவிரி பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை கோவையில் வருகிற 19-ந் தேதி நடத்துகிறார். அதில் கலந்து கொள்ளுமாறு என்னை செல்போனில், கமல்ஹாசன் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். சினிமா நடிகர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி முடிவு எடுத்துள்ளது. எனவே கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி கலந்து கொள்ளாது.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து மக்களும் சாதி, மத, அரசியல் வேறுபாடின்றி ஒன்றுகூடி போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்