பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களின் கோரிக்கை விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalinasamy
சென்னை
புதிய தலைமுறை டிவி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரி வருகின்றனர். இந்த நிலையில், சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின், புதிய தலைமுறை மீதான வழக்குப்பதிவு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் என குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதேபோல் புதிய தலைமுறை மீதான வழக்கு தேவைதானா என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, புதிய தலைமுறை மீதான வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது காவல்துறையின் எப்ஐஆரில் உள்ள தகவல்களை பேரவையில் முதலமைச்சர் விவரித்தார்.
புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்பப் பெறுவது பற்றி விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிக்கும் என கூறினார்.