பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் சந்திப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட 14 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2018-07-07 21:15 GMT
சேலம், 

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டம் தொடர்பாக, நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்டோர், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கோம்பூர், காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்ரோடு ஆகிய கிராமங்களில், இந்த திட்டத்தால், பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து, பாதிப்பு குறித்து கருத்துகேட்டனர். பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சாமியாபுரம் கூட்ரோடு பகுதிக்கு, காரில் வந்தார்.

அப்போது, பாலபாரதியின் காரை தடுத்து நிறுத்திய பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, விவசாயிகளை சந்திக்க கூடாது என கூறினார். இதற்கு பதிலளித்த பாலபாரதி விவசாயிகளை சந்திக்க கூடாது என ஆணை உள்ளதா? எனக் கேட்டார். இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர், தனது உயர் அதிகாரியிடம் பேசி விட்டு, செல்போனை பாலபாரதியிடம், கொடுத்தார்.

அப்போது, பேசிய பாலபாரதி அனுமதி வாங்கி மக்களை சந்திக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் நான் இருக்க மாட்டேன் எனக்கூறினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. கைது

இதையடுத்து, மதியம் கோட்டமேடு கிராமத்திற்கு வந்த பாலபாரதி உள்ளிட்ட 14 பேரை, 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை அனுமதியின்றி சந்தித்ததாக கூறி போலீசார், கைது செய்தனர். பின்னர் போலீசார், அவர்களை ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு, நிருபர்களிடம் பாலபாரதி கூறுகையில் ‘8 வழி பசுமைச்சாலையால் பாதிக்கப்படும் மக்களை சந்திக்க விடாமல், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்று, ஆட்சியாளர்களும், போலீசாரும் நடந்து கொள்கின்றனர். இது ஜனநாயக விரோத செயலாகும். 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளை ஒன்று திரட்டி போராடுவோம்’ என்றார். 

மேலும் செய்திகள்