பயிற்சியாளர் மெத்தனமாக நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது மு.க.ஸ்டாலின் அறிக்கை

மாணவி மரணம் விவகாரத்தில் பயிற்சியாளர் மெத்தனமாகவும், கவனக்குறைவாகவும் நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2018-07-13 15:09 GMT

சென்னை, 


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை அருகே தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பயிற்சியின்போது, மாணவி லோகேஸ்வரி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 

மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உடன் பயிலும் மாணவிகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துகொள்கிறேன். பேரிடர் பயிற்சியை மாணவ–மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனை அளிக்கிறது. 

குறிப்பாக இரண்டாவது மாடியில் இருந்து குதிக்க வைக்கும் போது இவ்வளவு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற பேரிடர் பயிற்சிகள் போதிய பாதுகாப்புகளுடன் நடைபெறவும், பேரிடர் பயிற்சி, நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக்கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத்துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்