‘தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு ஆட்சி முடிவுக்கு வருவதற்கான அறிகுறி’ டி.டி.வி.தினகரன் பேட்டி

“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு ஆட்சி முடிவுக்கு வருவதற்கான அறிகுறி” என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

Update: 2018-09-12 20:36 GMT
ஆலந்தூர், 

“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு ஆட்சி முடிவுக்கு வருவதற்கான அறிகுறி” என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டு இருக்கிறது. மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழப்பதுபோல் தமிழக அரசு மீது ஒவ்வொரு ஊழலாக வெளியே வருகிறது.

அமைச்சர்களின் தரம் வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருக்கிறது. பினாமி கம்பெனிகள் பற்றி விவரங்கள் வெளியே வர உள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதும் பதற்றத்துடன் பேசுகின்றனர். அவர்களுக்கு மடியில் கனம் இல்லை என்றால் பதற்றமில்லாமல் தங்கள் குற்றச்சாட்டுகளை சந்திக்க வேண்டும். மடியில் கனம் இருப்பதால் நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள் என்று கடந்த ஆண்டே என்னிடம் கூறியவர்கள்தான், தற்போதைய அமைச்சர்கள். வேலுமணி போன்றவர்களை மக்களே துறவறம் போக செய்துவிடுவார்கள்.

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த மின்வெட்டு ஆட்சி முடிவுக்கு வருவதற்கான அறிகுறி ஆகும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். மாநில அரசு தனது வரியை குறைக்கலாம்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பாரதீய ஜனதா கட்சி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பணமதிப்பு இழப்பினால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வளர்ச்சிக்கான நடவடிக்கை என மத்திய அரசு கூறினாலும் அதை மக்கள் ஏற்கவில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இருக்காது. தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியின் மூலம் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்