செல்போன் எடுத்து வந்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளிக்கூட கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி உயிரிழந்த தற்கொலை செய்தார்.

Update: 2018-12-06 22:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை அம்மன் நகரை சேர்ந்தவர் சிவனேசன். அவருடைய மகள் சுவேதா (வயது 16). சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் பள்ளிக்கூடத்துக்கு செல்போன் எடுத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதை ஆசிரியர்கள் கண்டுபிடித்து கண்டித்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் அந்த மாணவியின் தந்தையை அழைத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த மாணவி விபரீதமாக பள்ளியின் மாடியில் இருந்து குதித்தார். இந்த சம்பவத்தால் பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மாணவியை சிகிச்சைக்காக உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

இந்த நிலையில் மாணவியின் உடல்நிலை மோசம் அடைந்தது. எனவே மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி நேற்று இறந்து போனார்.

இந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினரையும், சக மாணவர்கள், ஆசிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்