தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் பரவலாக மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை,
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் பரவலாக மிதமான மழைக்கும், ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னையை நோக்கி கடந்த வாரம் வந்த பெய்ட்டி புயல் ஆந்திரா பக்கம் சென்று விட்டதால் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மழை இல்லை. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது.
இதுபோல் அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி பரவி உள்ளது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.