எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்பும் தவறான செய்தியை மக்களின் ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்குவோம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பும் தவறான, பொய்யான செய்தி மக்களின் ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2019-01-17 00:10 GMT
சேலம்,

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைக்கு மகிழ்ச்சியான நாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சான்றோர்கள் சொன்னதைப் போல தை பிறந்திருக்கின்றது. இந்த தை பொங்கல் அத்தனை குடும்பங்களிலும் பொங்கல் பொங்கி, மகிழ்ச்சி பொங்க இந்த நன்னாளில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் மணிமண்டபம், அந்த மணிமண்டபத்திலே அவர்கள் இருவரின் வெண்கல முழு உருவச்சிலையையும் திறந்து வைத்து உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

மு.க.ஸ்டாலின் அவரது கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் கிராமம், கிராமமாகச் சென்று மக்களை சந்திப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டு, அந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, கிராமம், கிராமமாகச் சென்று, மக்களை சந்தித்து, குறைகளை தீர்த்த அரசு அ.தி.மு.க. அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எம்.எல்.ஏ. ஆக இருக்கிறபொழுது மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் எல்லா கிராமங்களுக்கும் சென்றிருக்கிறேன்.

சேலம் மாவட்டத்திலுள்ள அத்தனை கிராமங்களுக்கும், பேரூராட்சி பகுதிக்கும், நகராட்சி பகுதிக்கும், மாநகராட்சி பகுதிக்கும் நாங்களெல்லாம் சென்று வந்திருக்கிறோம். விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தத் திட்டம் போய் சேரவேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், எல்லா பகுதிக்கும் நானே நேரடியாகச் சென்று அந்த திட்டத்தை துவக்கி வைத்தேன். ஜெயலலிதாவின் உத்தரவை ஏற்று, அந்த கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதையறிந்து, அதை உடனுக்குடன் ஜெயலலிதாவிடம் தெரிவித்து, அவர்களுடைய குறையை தீர்த்து இருக்கிறோம். அவரின் மறைவிற்குப் பிறகும், அதையே தொடர்ந்து இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நீங்கள் கிராமம், கிராமமாக போனாலும் சரி, நடைபயணம் மேற்கொண்டாலும் சரி அ.தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு தந்திருக்கின்றது. அவர் (மு.க.ஸ்டாலின்) உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். கிராமப்புற, நகரப்புற மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற பொறுப்பு உள்ளாட்சி அமைச்சரிடத்தில் இருந்தது. அப்பொழுது, எத்தனை கிராமத்திற்கு நீங்கள் சென்றீர்கள்? எத்தனை மக்களை பார்த்தீர்கள்? எத்தனை மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொடுத்தீர்கள்? எதையும் செய்யவில்லை, இதெல்லாம் போலி விளம்பரம்.

இவர் ஆட்சியில், பதவியில் இருந்தபொழுது, எனக்குத் தெரிந்த அளவில் இவர் கிராமத்திற்கே சென்றது போல் தெரியவில்லை. மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் எத்தனை கிராமங்களுக்கு வந்திருக்கிறார்? ஆளுங்கட்சியாக இருக்கும்பொழுதே மக்களை பார்க்கவில்லை, இப்பொழுது எதிர்க்கட்சியாகி மூன்று வருடங்கள் ஆகிறது, எங்கு போய் மக்களை பார்த்தீர்கள்? இப்பொழுது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக, இவர்கள் கிராம சபை கூட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களை எந்த அரசியல் தலைவராலும் ஏமாற்ற முடியாது. தங்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

கிராமத்திலே இருந்து நகரம் வரை ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சேரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கின்றோம். இருபெரும் தலைவர்கள் ஏராளமான திட்டங்களை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம், வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான, பொய்யான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனையும், உங்களுடைய மகத்தான ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கப்படும். இந்த அரசு என்றைக்கு உங்களுக்கு துணை நிற்கும், உங்களுக்காக இந்த அரசு எப்போதும் சேவை செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

மேலும் செய்திகள்