90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2019-01-29 11:57 GMT
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கீழ் கடந்த 22–ந்தேதி முதல் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் மாணவ மாணவியரின் கல்வி பாதிப்படைந்து உள்ளது.  இந்த நிலையில், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த கெடு  முடிவடைந்தது.  எனினும் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்தனர். இதற்கிடையே பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது.

இன்று ஐகோர்ட்டில் இவ்விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது, 90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது என நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஓரிரு நாளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விடும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நீதிமன்ற குறிக்கோள் என நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்