ராகுல்காந்தி அனுமதி அளித்தால் ‘திருச்சி தொகுதியில் போட்டியிடுவேன்’ திருநாவுக்கரசர் சொல்கிறார்

ராகுல்காந்தி அனுமதி அளித்தால் ‘திருச்சி தொகுதியில் போட்டியிடுவேன்’ என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-15 18:45 GMT
சென்னை, 

சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்த தமிழக காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:–

 காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு வாங்கி பணம் செலுத்துவார்கள். அதற்கு பிறகு, 15 பேர் கொண்ட மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர் பார்த்து, ஒரு பட்டியல் தயார் செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். 

டெல்லியில் தேர்தல் குழு ஒன்று இருக்கிறது. மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர் பரிந்துரைத்தவர்களை பார்த்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்வார்கள். 

ராகுல்காந்தி அனுமதியுடன் அந்த பட்டியல் வெளியாகும். திருச்சி தொகுதியில் என் பெயர் வந்தால் நான் போட்டியிடுவேன். நான் நிற்க விருப்பப்படுகிறேன். விருப்ப மனு கொடுப்பேன். ராகுல்காந்தி அனுமதி கொடுத்தால் தேர்தலில் நிற்பேன்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளும் காங்கிரஸ் விரும்புகிற தொகுதிகள் தான். எங்கள் வேட்பாளர்கள் உள்பட தோழமை கட்சி வேட்பாளர்களும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தான். எல்லோரும் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்