பா.ஜனதா போட்டியிடும் 5 தொகுதிகளில் தனித்தனியாக தேர்தல் அறிக்கை தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதை வைத்து தயாரித்தார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கையாகும்.

Update: 2019-03-21 20:29 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக வந்த தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது;-

தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதை வைத்து தயாரித்தார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கையாகும். பா.ஜனதா ஆட்சியில் தமிழகத்தில் முத்ரா வங்கி முலம் 25 சதவீதம் பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சிக்காக மத்திய அரசு 4-வது கட்டமாக நிதி ஒதுக்கி உள்ளது. ஸ்டாலின் தமிழகத்தில் தான் இருக்கிறாரா? நினைவாற்றலுடன் தான் இருக்கிறாரா? என தெரியவில்லை.

நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பை ஸ்டாலின் எப்படி மாற்ற போகிறார்? ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி அறிவிப்பதா? அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வை பா.ஜ.க. மிரட்டுவதாக கூறுகின்றனர். தோழமையுடன் தான் அ.தி.மு.க.விடம் பா.ஜனதா செயல்படுகிறது. தமிழக பா.ஜனதா போட்டியிடும் 5 தொகுதிகளில் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்