முஸ்லிம் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இந்துக்களை தரக்குறைவாக பேசிய கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் - எச்.ராஜா

கமல்ஹாசன் முஸ்லிம் ஓட்டுகளை பெறுவதற்காக இந்துக்களை பற்றி தரக்குறைவாக பேசினார்.

Update: 2019-05-16 00:03 GMT
கொடைக்கானல், 

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன் முஸ்லிம் ஓட்டுகளை பெறுவதற்காக இந்துக்களை பற்றி தரக்குறைவாக பேசினார். அவரை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

அங்கு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை முஸ்லிம் பெண்கள் பொருட்களை வாங்குவதற்கு வரக்கூடிய நேரத்தில் இந்துக்கள் அந்த வழியாக செல்லக்கூடாது என்ற நிலை இருந்தது. அதை மாற்றுவதற்காக போராடியது பா.ஜனதா கட்சி தான்.

விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் வெளி வருவதற்காக முஸ்லிம்களின் காலில் விழுந்தவர் கமல்ஹாசன். சினிமாவில் காசு பார்க்கும் கமல்ஹாசன் இந்துக்களின் மேல் பாயக்கூடாது. அன்பே சிவம் படத்தில் அவருடைய இந்து விரோதபோக்கு நமக்கு கண்கூடாக தெரிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி வைரமுத்து தவறாக பேசியபோது இந்துக்கள் வெகுண்டெழுந்தனர். அதுபோன்ற நிலை தற்போது கமல்ஹாசனுக்கு எதிராக உருவாக வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து பா.ஜனதா ஆட்சி அமைக்கும். சிவகங்கை தொகுதியினை ஊழல் குடும்பத்தில் இருந்து மீட்டெடுத்து என்னை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

மேலும் செய்திகள்