லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

Update: 2019-09-21 11:07 GMT
நாமக்கல் 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த சரவணன், கேசவன், கந்தம்மாள், வசந்தி ஆகியோர் ஒரு வயது குழந்தை பிர்ஜின் உடன், காரில் கோவிலுக்குச் சென்று விட்டு,  ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கபிலர் மலை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காரை ஓட்டினார். எருமப்பட்டி அருகே வரகூர் என்ற இடத்தில் கார் வந்து  கொண்டிருந்த போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, எதிரே வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முழுவதும் உருக்குலைந்து போனது. காரில் இருந்த குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமுற்ற வசந்தி என்ற பெண் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தி விட்டு திரும்பிய போது இந்த விபத்து நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்