திண்டிவனத்தில் கனமழை; எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணிநேரம் தாமதம்

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணிநேரம் தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றன.

Update: 2019-09-22 04:10 GMT
திண்டிவனம்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் வெப்பம் சற்று தணிந்துள்ளதுடன் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.

இதனிடையே, திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன்  கூடிய கனமழை பெய்தது.  இடி, மின்னல் தாக்கியதில் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் உள்ள சிக்னல் பழுதடைந்தது.  இதில், ரெயில்கள் புறப்பட்டு செல்வதற்கு அனுமதி வழங்கும் பச்சை வண்ண சிக்னல் செயல்படவில்லை.

இதனால் அதிவிரைவு ரெயில்கள் திண்டிவனத்திற்கு முன்பு பாஞ்சாலம் மற்றும் ஒலக்கூர் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.  இதன்பின்பு நெல்லை அதிவிரைவு ரெயில் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதேபோல அனந்தபுரி, மன்னை, பாண்டியன், காரைக்கால், சேலம், உழவன், மங்களூர் , ராக்போர்ட் ஆகிய ரெயில்கள் தொடர்ந்து காலதாமதமாக திண்டிவனம் ரெயில் நிலையத்தை கடந்து சென்றன.  இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்