மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரு அவதூறு வழக்குகள் தாக்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழக அரசை தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் நல்லாட்சி வழங்குவதற்கான குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை விமர்சித்து அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதில், வேலைவாய்ப்பு, விவசாயம், சமூக நலம் என எல்லா துறைகளிலும் கடைசி இடத்தைப் பிடித்த தமிழகம் எப்படி நல்லாட்சி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் தமிழகத்தில் நடப்பது அலங்கோல ஆட்சி என்று காட்டமாகக் கூறியிருந்தார்.
மு.க.ஸ்டாலின் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த அந்த அறிக்கை, அந்த நாள் அதாவது (டிசம்பர் 30ம் தேதி) கடந்த ஆண்டு முரசொலி உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானது.
இதைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் என்று கூறி அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.