திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி மறைவு: சிறந்த தொண்டரை இழந்துவிட்டேன் - ஸ்டாலின் உருக்கம்
உடல்நிலை குன்றிய நிலையிலும் கே.பி.பி.சாமி திமுக கொள்கைப் பாடலை பாடினார், சிறந்த தொண்டரை இழந்துவிட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை
சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (வயது 58) உடல் நலக்குறைவால் காலமானார். திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது.
மறைந்த எம்.எல்.ஏ கே.பி.பி சாமி, திமுக ஆட்சி காலத்தில் மீன் வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். திமுகவின் மீனவரணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கே.பி.பி.சாமியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொருளாளர் துரைமுருகன், டிகேஎஸ் இளங்கோவன், கலாநிதி வீராசாமி, சேகர்பாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
கே.பி.பி. சாமி உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்..உடல்நிலை குன்றிய நிலையிலும் கே.பி.பி.சாமி திமுக கொள்கைப் பாடலை பாடினார். சிறந்த தொண்டரை இழந்துவிட்டேன். அவரது மறைவு, திமுக, அவரது குடும்பம், மீனவ சமுதாயம் உள்ளட்ட அனைவருக்கும் பெரும் இழப்பு. மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காக இருந்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.