தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-03-25 18:03 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  ஒருவர் உயிரிழந்து உள்ளார். 

அதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர்  வெளியிட்ட தகவலின்படி, டெல்லியில் இருந்து தமிழகம் வந்த நபர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவதாகவும், 2 நாட்களில் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 18 வயது ஆண் ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு நபர் 63 வயது ஆண் ஆவார். இவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது நபரான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 66 வயது ஆண், பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்