நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கு - மேலும் 4 பேர் கைது

நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-05-26 04:39 GMT

கோப்புப்படம்

நெல்லை,

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்தவர் சிவகுருமுத்துசாமி மகன் தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அவரை ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

இவர் கடந்த 20-ந் தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரின் நண்பர்களுடன் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் தீபக்ராஜாவை வெட்டிக்கொலை செய்தனர்.

இதனையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கோடு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்ய முயன்ற போது அதில் நவீன் மற்றும் முருகன் ஆகிய இருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அப்போது இருவருக்கு கை, கால்களில் அடிபட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் சிறையில் உள்ளனர். மீதமுள்ள 4 பேரில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்