கொரோனா நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை
கொரோனா நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
சென்னை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக தமிழக அரசுக்கு நன்கொடை அளியுங்கள் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் உள்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தனது ஒரு மாத சம்பளத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், அரக்கோணம் தொகுதியில் கொரோனா தடுப்பு பணிக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முதற்கட்டமாக ரூ.10 லட்சமும், திராவிடர் கழகம் சார்பில் ரூ.5 லட்சமும் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தங்களது ஒருநாள் சம்பளத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம், தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.