தமிழகத்தில் புதிதாக 3,949 பேரை கொரோனா தாக்கியது;13 வயது சிறுவன் உட்பட 62 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 3,949 பேரை கொரோனா தாக்கியது. மொத்த பாதிப்பு 86,224 ஆக அதிகரித்து உள்ளது. 13 வயது சிறுவன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-06-29 23:30 GMT
சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 2 ஆயிரத்து 212 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 47 ஆயிரத்து 749 பேர் குணம் அடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 44 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் என 62 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா உயிரிழப்பு 1,141 உயர்ந்து இருக்கிறது. நேற்றைய உயிரிழப்பு பட்டியலில் சென்னையில் 23 வயது வாலிபர் உட்பட 37 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும்,

மதுரையில் 4 பேரும், ராமநாதபுரத்தில் இருவரும், புதுக்கோட்டையில் 13 வயது சிறுவனும், காஞ்சீபுரம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், நெல்லையில் தலா ஒருவரும் இடம் பெற்றனர்.

புதிதாக 30 ஆயிரத்து 39 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 3 ஆயிரத்து 841 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 379 ஆண்களும், 1,570 பெண்களும் அடங்குவர்.

தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 53 ஆயிரத்து 124 ஆண்களும், 33 ஆயிரத்து 79 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 21 பேர் என மொத்தம் 86 ஆயிரத்து 224 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்ட 4 ஆயிரத்து 225 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 10 ஆயிரத்து 271 முதியவர்கள் அடங்குவர். நேற்று மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 213 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 517 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில் 2,167 பேரும், மதுரையில் 303 பேரும், செங்கல்பட்டில் 187 பேரும், திருவள்ளூரில் 154 பேரும், வேலூரில் 144 பேரும், திருச்சியில் 87 பேரும், விருதுநகரில் 77 பேரும், காஞ்சீபுரத்தில் 75 பேரும், கள்ளக்குறிச்சியில் 68 பேரும், கோவையில் 65 பேரும், திண்டுக்கலில் 64 பேரும், ராமநாதபுரம், தேனியில் 61 பேரும், விழுப்புரத்தில் 52 பேரும், சேலத்தில் 42 பேரும், திருவண்ணாமலையில் 41 பேரும், தூத்துக்குடியில் 37 பேரும், கன்னியாகுமரியில் 29 பேரும், புதுக்கோட்டையில் 27 பேரும், கடலூரில் 26 பேரும், சிவகங்கை, கிருஷ்ணகிரியில் தலா 21 பேரும், திருப்பத்தூரில் 17 பேரும், ஈரோட்டில் 16 பேரும், திருவாரூரில் 15 பேரும், நீலகிரியில் 14 பேரும், நாகப்பட்டினத்தில் 11 பேரும், திருப்பூரில் 10 பேரும், நெல்லையில் 7 பேரும், ராணிப்பேட்டையில் 6 பேரும், தென்காசியில் 4 பேரும், தஞ்சாவூரில் இருவரும், தர்மபுரி, கரூரில் தலா ஒருவரும் என 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு பட்டியலில் சென்னையில் 846 பேரும், செங்கல்பட்டில் 87 பேரும், திருவள்ளூரில் 66 பேரும், மதுரையில் 29 பேரும், காஞ்சீபுரத்தில் 20 பேரும், விழுப்புரத்தில் 14 பேரும், திருவண்ணாமலையில் 10 பேரும், ராமநாதபுத்தில் 8 பேரும், நெல்லையில் 7 பேரும், விருதுநகர், திண்டுக்கலில் தலா 6 பேரும், கடலூரில் 5 பேரும், வேலூர், திருச்சி, தூத்துக்குடி, ஈரோட்டில் தலா 4 பேரும், புதுக்கோட்டை, ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, தேனியில் தலா இருவரும், தஞ்சாவூர், நாமக்கல், கன்னியாகுமரி, கோவை மற்றும் விமான கண்காணிப்பு முகாமில் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்