அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம்

வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவிகித்தை வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-17 10:26 GMT
சென்னை,

கல்வி கட்டணம் தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான அரசு தரப்பு வாக்கறிஞர், தற்போதைய ஊரடங்கு சூழலில் 25 சதவீதம்,  பள்ளிகள் திறக்கும் போது 25 சதவீதம், பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் கட்டணத்தை மூன்று தவணையாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மீதமுள்ள 25 சதவீத கட்டணம் குறித்து பள்ளிகளுக்கான நிர்ணய குழு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படும் நிலையில், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலிக்காமல் எப்படி சம்பளம் கொடுக்க முடியும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. மேலும், 80 சதவீத கட்டணம் வசூலிக்கவும், முதல் தவணையாக 50 சதவீதம் கட்டணத்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தது.

இதன்படி, தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம்,  வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவிகித்தை வசூல் செய்து கொள்ளலாம்  என்று  தெரிவித்துள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு 35 சதவிகித கல்வி கட்டணத்தை வசூலித்துக்கொள்ளலாம் எனவும் மறு உத்தரவு வரும் இந்த உத்தரவு பொருந்தும் என்று கூறிய நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும்  அக் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

மேலும் செய்திகள்