வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் நடைமுறை தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-08-14 10:35 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்ற இ-பாஸ் முறை தமிழ்நாட்டில் உள்ளது. இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இ பாஸ் நடைமுறையில் இன்று தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய பணிகளுக்கும் இபாஸ் வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டை, செல்போன் எண், ரேஷன் கார்டு கொடுத்தால் விண்ணப்பித்த எல்லாருக்கும் தங்கு தடையின்றி இபாஸ் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டுமே என்றும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது பொருந்தாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு இப்போது இருக்கும் இ-பாஸ் நடைமுறை விதிமுறைகள் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்