அரசு மருத்துவமனையில் மின் துண்டிப்பால் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு அதிகபட்ச நிதி உதவி அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
அரசு மருத்துவமனையில் மின் துண்டிப்பால் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு அதிகபட்ச நிதி உதவி அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 2 பேர், திடீரென ஏற்பட்ட மின்சார துண்டிப்பால் உயிர் இழந்துள்ளனர். இது மிகுந்த வேதனைக்குரியது. ஒப்பந்தக்காரர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக மின் இணைப்பை துண்டித்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. மரணமடைந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு அதிகப்பட்ச நிதியுதவி அளிக்க வேண்டும். மரணமடைந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.