நிவர் புயல்; அடையாறு, திருவான்மியூர் கடற்கரைகளுக்கு மக்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை
நிவர் புயலால் கடல் சீற்றத்துடன் உள்ளதால் அடையாறு, திருவான்மியூர் கடற்கரைகளுக்கு மக்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சென்னை,
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியது. ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிவர் புயல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. நிவர் புயலை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம் என்று கடலோர காவல்படை அறிவித்து உள்ளது. இதற்காக பேரிடர் மேலாண்மை குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
நிவர் புயலால் கடல் சீற்றத்துடன் உள்ளதால் கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வரவேண்டாம் என அடையாறு காவல் துணை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதேபோன்று நிவர் புயல் காரணமாக அடையாறு, திருவான்மியூர் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.