புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-10 09:11 GMT
சென்னை,

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்துவந்தது. இந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை(2021) கொண்டு வந்தது.

இதற்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க வேண்டும் என மே 25 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த விதிகளுக்கு கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், டுவிட்டர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. 

இந்த விதிகளை பொறுத்தவரை குடிமக்களின் தனி உரிமையை நிலைநாட்டுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், சட்ட ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

மத்திய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தன் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்யக் காரணமாக அமைந்துள்ளது எனவும், தனி உரிமையையும், கருத்துரிமையையும் பாதிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

டி.எம்.கிருஷ்ணாவின் இந்த மனுவை இன்று தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்