அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை - ஓ.பன்னீர்செல்வம்

அரசியல் காழ்புணர்வு காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போடும் நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2021-07-22 09:52 GMT
சென்னை

கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

காலை 7 மணி முதல் சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை என 23 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்யபுரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்த காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் ஆர்யபுரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டிற்கு வருகை தந்த அவரது வழக்கறிஞர் செல்வம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கூறினார்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போடும் நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது. 

எங்களை அச்சுறுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ள அ.தி.மு.க. தயார். 

 தி.மு.க. அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டபூர்வமாக இதை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்