தமிழகத்தில் 2,01,54,901 தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டு உள்ளன; அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் 2,01,54,901 தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டு உள்ளன என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2021-07-23 20:35 GMT


சென்னை,

தமிழகத்தில் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது.

இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார்.  கூட்டத்தில், துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாநகராட்சி துணை கமிஷனர் மணிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் மருத்துவமனைகளை சி.எஸ்.ஆர். நிதிக்கு கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்த்து இதுவரை 2,01,54,901 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 6 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 2 கோடி தடுப்பூசி மட்டுமே போட்டு இருக்கிறோம்.

இன்னும் 10 கோடி தடுப்பூசி வேண்டும்.  ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆகஸ்டு மாதம் கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்