ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் குரலாக திகழ்ந்தவர் மதுசூதனன்; முதல்-அமைச்சர் இரங்கல்

ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் குரலாக அ.தி.மு.க.விற்குள் இறுதி மூச்சுவரை திகழ்ந்தவர் மதுசூதனன் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-08-05 14:02 GMT

சென்னை,

முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அவைத்தலைவரான இ. மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறினார்.  வயது முதிர்வு காரணமாக அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார்.

எனினும் அவ்வப்போது அவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், இன்று பிற்பகல் 3.42 மணிக்கு அவர் காலமானார்.

அவரது மறைவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டு, அ.தி.மு.க. கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட உள்ளது.  அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அ.தி.மு.க அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.இ. மதுசூதனன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன்.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அ.தி.மு.க.வில் முன்னாள் முதலமைச்சர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்றவர். அவர்களால் கட்சியில் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டவர். அ.தி.மு.க.வின் அவை தலைவராக பணியாற்றிய அவர், அக்கட்சியின் வளர்ச்சிக்கு பட்டிதொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடி தலைவரை அ.தி.மு.க. இழந்திருப்பது பேரிழப்பாகும். இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

சாதாரண தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாக பழகியவர். ஏழை - எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அ.தி.மு.க.விற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த திரு. மதுசூதனன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்