தமிழகத்தில் சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.