கருணாநிதியிடம் எம்ஜிஆர் அமைச்சர் பதவி கேட்பது போல் காட்சி வைத்துள்ளதை நீக்கவேண்டும்" - ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-10 13:37 GMT
சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது 'தலைவி' திரைப்படம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இன்று திரையரங்கில் பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் கூறியதாவது, 

ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் துணிவுடன் சாதித்துக் காட்டுகிறார் என்பதை தலைவி படம் காட்டுகிறது. அது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் படத்தின் ஒரு இடத்தில் எம்.ஜி.ஆர் பதவிக்கு ஆசைப்பட்டது போல காட்சி வருகிறது. எம்.ஜி.ஆர் என்றைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. 

அப்படி வரும் படத்தின் காட்சி உண்மையல்ல. அதை நீக்க வேண்டும். அதேபோல தன் படங்கள் மூலமும் பாடல்களின் மூலமும் ஜெயலலிதா தான் அ.தி.மு.க.வுக்குத் தனக்குப் பின் தலைமை தாங்குவார் என்பதை உணர்த்தியவர் எம்.ஜி.ஆர். ஆனால், அப்படிப்பட்டவர் ஜெயலலிதாவை அவமதிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. அதையும் நீக்க வேண்டும். 

நடக்காத சம்பவங்களைப் படத்தில் வைத்திருக்கக் கூடாது. இதைப் பார்ப்பவர்கள் மனதில் வெவ்வேறு எண்ணங்களை உருவாக்க வாய்ப்புள்ளது. தி.மு.க எங்களுக்கும் எங்கள் தலைவிக்கும் கொடுத்த தொல்லைகளை படத்தில் சொல்லப்படவே இல்லை. வரலாறு என்று வரும்போது அதையும் சொல்லியிருக்க வேண்டும். அதைப் படத்தில் சொல்லப்படவில்லை. இவையெல்லாம் சொல்ல மறந்த கதைகள்” இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்