என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு: அடுத்த மாதம் 17-ந்தேதி வரை நடக்கிறது

என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 17-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

Update: 2021-09-28 02:24 GMT
கோப்புப்படம்
சென்னை, 

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு கடந்த 17-ந்தேதி முதல் தொடங்கி நடக்கிறது.

முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கி கடந்த 24-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தக் கலந்தாய்வு மூலம் 6 ஆயிரத்து 442 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுவிட்டன.

இதன் தொடர்ச்சியாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெற இருக்கும் இந்த கலந்தாய்வில், தரவரிசை பட்டியலில் 1 முதல் 14 ஆயிரத்து 788 வரை உள்ள மாணவர்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கியது. வருகிற 5-ந்தேதி வரை இவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

அதன்பிறகு 14 ஆயிரத்து 789 முதல் 45 ஆயிரத்து 227 வரை தரவரிசையில் உள்ளவர்களுக்கு 2-ம் சுற்று கலந்தாய்வு வருகிற 1-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 3-ம் சுற்று கலந்தாய்வு 5-ந்தேதியும், 4-ம் சுற்று கலந்தாய்வு 9-ந்தேதியும் தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி பொது கலந்தாய்வு அடுத்த மாதம் 17-ந்தேதி வரை நடக்கிறது.

இதேபோல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கும் நேற்று கலந்தாய்வு தொடங்கி உள்ள நிலையில், வருகிற 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கலந்தாய்வில் மாணவர்கள் முதலில் முன்பணம் கட்டுவதற்கும், அதன்பின்னர் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்டு, அதையடுத்து தற்காலிக ஒதுக்கீடும், அதில் விருப்ப கல்லூரியை உறுதி செய்யும் மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்