தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-10-11 06:47 GMT
சென்னை,

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 4, 5 நாட்களில் மேலும் வலுப்பெற்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர கூடும்.

இதன் காரணமாக அடுத்த நான்கு, ஐந்து நாட்களுக்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கொங்கன் மற்றும் கோவா, மத்திய மராட்டியம், கர்நாடகாவின் உட்புற பகுதிகள், ராயலசீமா, கேரளா, மாஹி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கூறியுள்ளது.

அந்தமான் கடல், தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.  இதனால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்