சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை

சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை.

Update: 2021-11-30 18:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும், புறநகர் பகுதிகளில் உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி அதிகமாக உபரி நீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்கிறது.

இதனால் பெரும்பாக்கம் எழில் நகர், ஜவகர் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் பிரதான சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வெள்ளம் போல் நீர் ஓடுகிறது. இதன் காரணமாக பெரும்பாக்கத்தில் இருந்து சோழிங்க நல்லூர் செல்ல கூடிய பிரதான சாலையை போக்குவரத்து பயன்பாட்டிற்காக போலீசார் தற்காலிகமாக தடை விதித்தனர்.

இந்த பகுதியில் வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் சோழிங்கநல்லூர், சிறுச்சேரி, காரப்பாக்கம் பகுதிகளில் உள்ள ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்ற கூடியவர்கள் போக்குவரத்து தடையால் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

கடந்த 5 நாட்களாக இந்த பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி ஓடுவதால் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே மோட்டார் பம்புகள் மற்றும் துரித நடவடிக்கை மூலமாக தண்ணீரை வெளியேற்றி விரைவில் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்