பதவியில் இல்லாத அமைச்சர்கள், நீதிபதிகள் வாகனத்தில் அரசு சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

பதவியில் இல்லாத அமைச்சர்கள், நீதிபதிகள் வாகனத்தில் அரசு சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் ஐகோர்ட்டு கருத்து.

Update: 2021-12-14 20:01 GMT
சென்னை,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு, தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாக சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

போத்ரா மரணத்துக்கு பின்னர், அவரது மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை நடத்தி வருகிறார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, “பதவியில் உள்ள எம்.பி.,க்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தலாம் என விதிகள் உள்ளன. ஆனால், அதை மீறி பதவி காலம் முடிந்த பின்னரும், ஓய்வுபெற்ற பின்னரும் பலர் இந்த சின்னங்களை பயன்படுத்துகின்றனர். இப்படி அடையாளங்களை பயன்படுத்தினால், அந்த வாகனங்களை சாலையில் நிற்கும் போக்குவரத்து போலீஸ்காரர் எப்படி நிறுத்தி விசாரிப்பார்? அதனால், பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்” என்று கூறினார்.

பின்னர், “இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸ்காரர் நடவடிக்கை எடுக்கும் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என்று ஆலோசனைகளை தமிழக டி.ஜி.பி.யும், சென்னை போலீஸ் கமிஷனரும் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற ஜனவரி 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்