தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.16 கோடி பணம் பறிமுதல்
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் ரூ 2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, தற்போது வரை கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், சென்னை என 69 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
69 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செல்போன், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்புடைய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.