டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை

டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2021-12-28 19:43 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் சாத்தமங்கலம் ஊராட்சி சக்திவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 45). விவசாயியான இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பரமசிவம் மகன் ஸ்ரீதர் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சக்திவிளாகம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் ராமதாஸ், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், பரமசிவம், உறவினர் மகாராஜன் ஆகியோர் அவர்களிடம் இங்கு உட்கார்ந்து பேசக்கூடாது என்றனர். இருப்பினும் ராமதாஸ், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

டிராக்டர் ஏற்றி கொலை

இதற்கிடையில் இரவு 10 மணி அளவில் ஸ்ரீதர், அந்த வழியாக டிராக்டரை ஓட்டி வந்தார். அங்கு நண்பர்களுடன் ராமதாஸ் பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததும் ஸ்ரீதருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

உடனே ஸ்ரீதர் டிராக்டரை வேகமாக ஓட்டிச்சென்று, ராமதாஸ் மீது மோதினார். இதில் உடல் நசுங்கி ராமதாஸ் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், ஸ்ரீதரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஸ்ரீதர், பரமசிவம், மகாராஜன் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்