காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

Update: 2022-01-02 22:00 GMT
சென்னை,

காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெற்பயிர்கள் சேதம்

காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்துவரும் மழையால் 50 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் மழையில் சேதமடைந்திருப்பது டெல்டா விவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர்கள் சேதமடைந்துவிட்டன. கடலூர் மாவட்டத்திலும் தொடர்மழையால் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த பயிர்கள் மழையில் சேதமடைந்ததால், அவற்றில் இருந்த நெல்மணிகள் கொட்டிவிட்டன. மற்ற இடங்களில் கதிர் பிடிக்கும் நிலையில் இருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன.

ரூ.30 ஆயிரம் இழப்பீடு

சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கித்தான் விவசாயம் செய்கிறார்கள். நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் முதலீடு நாசமாகி கடன்காரர்களாக மாறுகின்றனர்.

நவம்பர் பிற்பகுதியில் பெய்த மழையில் சேதமடைந்த சம்பா பயிர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. முதல் இரு கட்ட மழையில் தப்பிய சம்பா பயிர்கள் கூட இப்போது சேதமடைந்துவிட்டன. அவற்றுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்காவிட்டால், விவசாயிகள் மீளமுடியாத கடன் வலையில் சிக்குவதை தடுக்க முடியாது.

தமிழ்நாட்டில் வானம் பெய்தாலும், காய்ந்தாலும் அதனால் பாதிக்கப்படும் முதல் இனம் விவசாயிகள்தான். அவர்கள் பாதிக்கப்படும்போது நிவாரணம் வழங்கி காப்பாற்றாவிட்டால், ஒரு கட்டத்தில் உணவுக்கு நாம் ஆலாய்ப் பறக்கும் நிலை உருவாகிவிடும்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். நவம்பர் மாத மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் இழப்பீட்டை இதே அளவுக்கு உயர்த்தி உடனடியாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்