மதுக்கடைகளை முழுவதுமாக மூடவேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை

மதுக்கடைகளை முழுவதுமாக மூடவேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை.

Update: 2022-01-11 18:58 GMT
சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவின் 3-வது அலை பரவாமல் இருப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இருப்பது நல்ல செய்தி. அதோடு இரவு நேர ஊரடங்கு, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்து இருப்பதும், வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் மூடுவதும், மற்றும் திரையரங்குகள், உணவு கூடங்களில் 50 சதவீதம் பேரும், திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் குறைந்த அளவு நபர்கள் கலந்துகொள்ளவும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

தற்போது தமிழகத்தில் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையால் 3 நாட்கள் தொடர் விடுமுறைகள் வருகிறது. அதனால் மதுக்கடைகளில் அதிகமாக மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே ஜனவரி 20-ந்தேதி வரை மதுக்கடைகளை முழுவதுமாக மூடவேண்டும். அப்போதுதான் அரசு எடுக்கும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கான அனைத்து முயற்சிகளும் 100 சதவீதம் பயனளிக்கும். தமிழக அரசு உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும். அதோடு மேலும் அதிகமாக கொரோனா பரவல் ஏற்பட்டால் முழுமையாக தொற்று குறையும் வரை மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்