பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர்,
கரூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை காரில் சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். காரில் மொத்தம் 5 பேர் பயணித்தனர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அயன்பேரையூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி முன்னால் சென்ற கார் மீது வேகமாக மோதியது.
இதனால், கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், லாரியின் அடியில் சிக்கி கொண்டு விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு ஆண், சிறுமி, 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளை, காரில் பயணம் செய்த 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
இந்த விபத்து குறித்து தகலறிந்த மங்களமேடு போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய சிறுவனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.