குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகளின் கூட்டம்....!

கன்னியாகுமரியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-05-01 10:06 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இருப்பினும் விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.  காலையில் சூரிய உதயம் பார்த்து விட்டு கடலில் குளித்து, பகவதி அம்மன் கோவிலில் சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்வதற்கு படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். அதனைத்  தொடர்ந்து காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர்.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது  மிகவும் உற்சாகத்துடன் குடை பிடித்தபடி கடலின் அழகை ரசித்தபடி காணப்பட்டனர். மேலும் மாலை வேளையில் இதமான காற்றை அனுபவித்தவாறு கடற்கரையில் உல்லாசமாக சுற்றுலா பயணிகள் சுற்றி வந்தனர்.

பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபாதை வியாபாரம் களை கட்டி காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். 

சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியததைத் தொடர்ந்து போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார், சுற்றுலா பாதுகாவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்