தென்காசி: பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு...!
தென்காசி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
சிவகிரி,
கேரள மாநிலம் கொல்லம் எலம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 32). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை(8), ஒரு ஆண் குழந்தை(4) உள்ளனர்.
ஸ்ரீஜித் தனது காரில் நண்பர் ராகேஷ் (32) என்பவருடன் மதுரை சென்று விட்டு நேற்று கேரளாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் வந்த கார் மாலை சுமார் 5 மணியளவில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி வயல்காட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜித் உயிரிழந்து உள்ளார். ராகேஷ் மேல்சிகிச்சைக்காக கேரளா மாநிலம் திருவாங்கூர் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.