காஞ்சீபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகரிடம் புகார் மனு அளித்தனர்.

Update: 2023-09-14 08:34 GMT

மின்சாரம் தாக்கி பலி

காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் தெரு திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்தாஸ் (வயது 26). இவருக்கு கீதா (22) என்ற மனைவியும் 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர் அதே பகுதியில் செயல்படும் அப்பளம் தயாரிக்கும் கம்பெனியில் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி சுரேஷ் தாஸ் அப்பள கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்தாஸ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

புகார் மனு

இது குறித்து அவரது குடும்பத்தினர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் உயிரிழந்த சுரேஷ் தாஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அஜாக்கிரதையாக செயல்பட்ட அப்பள கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்று தர வேண்டும் என்றும் கூறி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்