நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-05-09 06:41 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியில் இன்று காலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று, 3 குழந்தைகளை கடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு குழந்தைகளுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடித்ததில், முகத்தில் படுகாயம் அடைந்த சிறுவனுக்கு தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னை சூளைமேட்டில் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணை நாய் கடித்தது. அந்த பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயமடைந்தார். இதுபோன்ற நாய்க்கடி சம்பவங்கள் தொடரும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ராசிபுரம் பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்