ஆலந்தூரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

ஆலந்தூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-06-02 08:47 GMT

சென்னை அடையாறு எல்லைஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது 31). இவர், சிறுசேரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வினோத், தனது காரில் மனைவி, மகன் ஆகியோருடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் ராணுவ பீரங்கி அருகே வந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதை கண்டதும் வினோத் உடனே காரை நிறுத்திவிட்டு மனைவி, மகனுடன் கீழே இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம், கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துவந்து காரில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் புகை வந்ததும், வினோத் குடும்பத்துடன் கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்