மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்தபோது மெட்ரோ ரெயில் தூணில் மோதி பிளஸ்-1 மாணவன் பலி

சென்னை அருகே மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்தபோது மெட்ரோ ரெயில் தூணில் மோதி பிளஸ்-1 மாணவன் பலியானார்.

Update: 2023-04-20 03:41 GMT

சென்னையை அடுத்த ஆலந்தூர் காஜி தெருவை சேர்ந்தவர் அப்துல் ஆபித். இவருடைய மகன் முகமது ராயன் (வயது 16). இவர், அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர், தன்னுடன் பிளஸ்-1 படித்து வரும் ஆலந்தூர் குப்புசாமி தெருவை சேர்ந்த முகமது ரீஹன் (16) என்பவருடன் ரம்ஜான் மாதத் தொழுகையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் எம்.கே.என்.ரோடு வழியாக சென்றார்.

பின்னர் ஜி.எஸ்.டி. ரோட்டில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகே அதிவேகமாக ஆலந்தூர் ஆசர்கானா சுரங்கப்பாதை அருகே திரும்பும்போது பிளாட்பாரத்தின் ஓரத்தில் இருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது. இதில் நிலை தடுமாறிய இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி முகமதுராயன், மெட்ரோ ரெயில் தூணில் தலை மோதியதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த முகமது ரீஹனுக்கு இரு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்