கிராம மக்கள் திடீர் மறியல்

திருக்கோவிலூர் அருகே 5 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் ஆத்திரம்அடைந்த கிராமமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-12-03 18:45 GMT

திருக்கோவிலூர்

குடிநீர் வினியோகம் பாதிப்பு

திருக்கோவிலூர் அருகே உள்ள வேடாளம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று காலை வேடாளம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை அமைப்பாளர் காசிலிங்கம் தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருக்கோவிலூர்-கண்டாச்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் பழனி மற்றும் அரகண்டநல்லூர் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்ற கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்