கிண்டி அருகில் சாலையை கடக்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

கிண்டி அருகில் சாலையை கடக்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2023-10-05 07:44 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்தவர் ரிஷி கவுதம் (வயது 24). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஜாபர்கான்பேட்டையில் தங்கி இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி சென்றுவிட்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னை வந்தார்.

அப்போது, கிண்டி அருகே காசி தியேட்டர் சந்திப்பில் பஸ்சில் இருந்து இறங்கி தனது அறைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முற்பட்டபோது அவருக்கு பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று ரிஷி கவுதம் மேல் மோதியது. அதில், தூக்கி வீசப்பட்ட ரிஷி கவுதம் முன்னாள் சென்று கொண்டிருந்த பஸ்சின் பின் சக்கரத்தின் அடியில் சென்று விழுந்தார். இதில், பஸ்சின் சக்கரம் அவர் மேல் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்