கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானை

ஓவேலி சேரன் நகரில் கொட்டகையை உடைத்து காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Update: 2023-10-16 19:45 GMT

ஓவேலி சேரன் நகரில் கொட்டகையை உடைத்து காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

கொட்டகையை உடைத்தது

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் இரவு, பகலாக காட்டு யானைகள் ஊருக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் வனத்துறையினர் பல இடங்களில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடிய வில்லை. இந்தநிலையில் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சேரன் நகரில் நேற்று முன்தினம் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.

தொடர்ந்து பொதுமக்களின் குடியிருப்புகளில் முகாமிட்டது. பின்னர் தொழிலாளி பாலு என்பவரது வீட்டின் ஒரு பக்கம் உள்ள கொட்டகை மற்றும் கூரையை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது கூரையில் இருந்த ஆஸ்பெட்டாஷ் ஷீட்டுகள் உடைந்து கீழே விழுந்தது. இதனால் அச்சமடைந்த பாலு குடும்பத்தினர் சத்தம் போட்டனர். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் விரட்டினர்

இதன் பேரில் ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து சென்றது. அதன் பின்னரே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் காட்டு யானை தொடர்ந்து ஊருக்குள் வருவதால், அவசர நேரத்தில் இரவில் வெளியே வர முடியாத நிலை உள்ளதாக அச்சம் அடைந்து உள்ளனர்.

எனவே, காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதன் பேரில் ஊருக்குள்ள வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்